சென்னையில், பள்ளி மாணவிகளை தனியே அழைத்து பாலியல் வன்கொடுமை: போலீஸார் விசாரணை..

By 
ss3

சென்னையைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகளை அடையாளம் தெரியாத நபர் இரண்டு வருடங்களாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள கார்ப்பரேஷன் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியில் படித்துவந்த மூன்று மாணவிகள் அடையாளம் தெரியாத நபரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி வளாகத்திற்கு வெளியே அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறை அளிக்கும் தகவலின்படி, பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும்  8, 10 மற்றும் 12 வயது ஆனவர்கள். அவர்களை அதே பள்ளியில் படிக்கும் ஒன்பது வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபரிடம் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல் திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், ஜனவரி 31ஆம் தேதி வரை எப்ஐஆர் பதிவுசெய்யப்படவில்லை.

அடையாளம் தெரியாத அந்த நபர் மாணவிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதால், மாணவிகள் பயந்து தங்களுக்கு நடந்த கொடுமை பற்றி எதுவும் பேசவில்லை.

இந்நிலையில், நான்காவதாக ஒரு சிறுமியையும் அந்த ஒன்பது வயது சிறுவன் அந்த நபரிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்தச் சிறுமி தப்பித்து வந்து தனது பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்துவிட்டார். இதை அறிந்த பின், மற்ற குழந்தைகளும் பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லிவிட்டனர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் தரப்பில் ஜனவரி 23ஆம் தேதி காவல்துறையில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மாணவிகளை அழைத்துச் சென்ற ஒன்பது வயது சிறுவன் மற்றும் அவனது தாயிடம் திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this story