தூத்துக்குடி தேவாலயத்தில் இரு தரப்பினரிடையே மோதல்; போர்க்களமான சர்ச் - போலீஸ் குவிப்பு..

By 
rett

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான பரி பேட்டரிக் தேவாலயம் தூத்துக்குடி 1ம் ரயிவே கேட் அருகே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் குருவாக செயல்படும் செல்வின் துரை என்பவரது தலைமையில் புதிய சேகர கமிட்டி பதவியேற்ற பின்பு கமிட்டி உறுப்பினர்கள் கோயில்பிச்சை, தேவராஜன், எஸ் டி கே ராஜன், ரூபன் ஆகிய நான்கு பேரை கமிட்டியில் இருந்து நீக்கி உள்ளனர். இதை தொடர்ந்து குருவானவர் செல்வின் துரை மற்றும் எதிர் தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக காவல்துறை மற்றும் வருவாய் துறை தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பரி பேட்ரிக்  தேவாலயத்தில் எந்தவித சேகர கமிட்டி கூட்டமும் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பரி பேட்டரிக்கு ஆலயத்தில் வைத்து சேகர கமிட்டி கூட்டம் நடத்தப்படும் என குருவானவர் செல்வின் துரை நேற்று whatsapp மூலம் உறுப்பினர்களுக்கு தகவல்  கொடுத்துள்ளார்.  

இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் இன்று தேவாலயத்தில் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அங்கு உள்ளே சென்று கூட்டம் விதிமுறைகளை மீறி நடத்துகிறீர்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து இரு தரப்பினர் இடையேயும் மோதல் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளால் வசை பாடியுள்ளனர். 

மேலும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும்  சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தேவாலயத்தில் வைத்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story