10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
 

By 
exam5

தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை கண்டறிதல் பெயர்ப் பட்டியல், ஹால் டிக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளின் நிலை தொடர்பாக தேர்வுத்துறை சார்பில் இன்று சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறை சார்ந்த இயக்குனர்கள் அனைத்து முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 6 முதல் 10-ந்தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் முன் கூட்டியே நடத்தும் வகையில் தற்போது இதை மார்ச் 1-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று மாற்றி அமைத்துள்ளோம்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்முறை தேர்வுகளுக்கான அவகாசம் போதுமானதாக இல்லை என்றும் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதால் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-ந்தேதி வெளியாகும். பிளஸ்-1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 19-ந்தேதியும், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 5-ந்தேதியும் வெளியாகும்.

பொதுத் தேர்வை தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவர்கள் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Share this story