கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி.. 

By 
arvarv

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது.

இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அந்த சம்மன்கள் முறைகேடானது என கூறிய அவர், சம்மன்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையின்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.

இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல் முடிந்ததும், ஏப்ரல் 1ஆம் தேதி காலை 11:30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம், அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்புவதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Share this story