தனியார் மருத்துவமனையில் கோடிக்கணக்கான பணம் சிக்கியது?: வருமான வரித்துறை விசாரணை..

By 
muthus

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக மருத்துவமனைக்குச் சொந்தமான ரகசிய இடங்களில் பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டதை வருமானத்துறையினர் கைப்பற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் கொளுத்தும் வெயிலையையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் பணம் பட்டுவாடாவை தவிர்க்க தமிழகத்தில் அவ்வப்போது வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 15 மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். 

மருத்துவமனை என்பதால் அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும் சிகிச்சை பெற வருபவர்களுக்கும் சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் கதவுகளை பூட்டாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், டாக்டர் முத்து சரவணக்குமாரின் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனை முடிவில் 20 கோடி ரூபாய் அளவில் ரொக்கமாக பணம் கைப்பற்றப்பட்டதாகவும் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையின் வங்கிக் கணக்கிற்கு ஏராளமான பணம் வேறு வங்கி கணக்குகளில் இருந்து வந்துள்ளதும் அதனை அவர்கள் ரொக்கமாக எடுத்து சிலருக்கு கொடுத்துள்ளது குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

கைப்பற்றப்பட்ட பணம் மருத்துவ சேவையின் மூலம் பெறப்பட்டதா? அல்லது ஹவாலா பணமா? அல்லது வாக்காளா்களுக்கு வழங்கத் திட்டமிட்ட பணமா?  என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.  வருமான வரித்துறையினா் கைப்பற்றியுள்ள பணம் தொடா்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஆதாரங்களைக் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர். எலும்பியல் நிபுணர். இவரது மனைவியும் டாக்டராக உள்ளார். அவர் மகப்பேறு மருத்துவ நிபுணர். இம்மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டரின் மாமானார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story