சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு..

ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டுகளை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்து செயலிழக்க செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள பரிம்புரா-பந்தசவுக் தேசிய நெடுஞ்சாலையில், பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலையின் அருகே வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அந்த மணல் மூட்டையில், பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 கையெறி குண்டுகள் இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர்.
உடனடியாக, அந்த கையெறி குண்டுகளை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் அதை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வெடிகுண்டு நிபுணர்களால், அந்த 6 கையெறி குண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டது.
*