டிரைவர்கள் போராட்டம் : 28 கிலோ மீட்டர் நடந்தே சென்று திருமணம் செய்த இளைஞன்..
 

By 
odisha2

ஒடிசா மாநிலம் ரயஹடா மாவட்டம் பருதிபேடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் நரேஷ். இவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த டிபல்படு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை நரேஷுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்காக 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு செல்ல நரேஷின் குடும்பத்தினர் புறப்பட்டனர். இதற்காக 2 வேன்களை வாடகைக்கு புக் செய்தனர்.

ஆனால், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா முழுவதும் வாடகை கார், வேன் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மணமகன் நரேஷ் தனது திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும், தனது திருமணத்திற்கு பல்வேறு தடைகள் வந்தபோதும் மனம் தளராத மணமகன் நரேஷ் மணமகளின் வீட்டிற்கு நடந்தே செல்ல முடிவு செய்தார்.

28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு நரேஷ் நடந்தே சென்றார். அவருடன் குடும்ப உறுப்பினர்கள் 30 பேர் நடந்து சென்றனர். வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தனது பயணத்தை தொடங்கிய மணமகன் நரேஷ் 28 கிலோமீட்டர் நடந்து சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மணமகளின் வீட்டை வெற்றிகரமாக அடைந்தார்.

இந்த பயணத்திற்கு பின் வெள்ளிக்கிழமை காலை நரேஷுக்கு மணமகளுடன் திருமணம் நடைபெற்றது. கார் டிரைவர்கள் ஸ்டிரைக் போராட்டம் நடத்தினாலும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து 28 கிலோமீட்டர் நடந்து சென்று நரேஷ் மணமகளை திருமணம் செய்துகொண்டார்.

Share this story