நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு : ஒரே இடத்தில் 5,000 உடல்கள் அடக்கம்..
 

By 
turkey

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மலை போல குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும்பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதில் தோண்ட,தோண்ட பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிகை 34 ஆயிரத்தை தாண்டி விட்டது.

துருக்கியில் 30 ஆயிரம் பேரும் சிரியாவில் 4 ஆயிரம் பேரையும் நிலநடுக்கம் காவு வாங்கி உள்ளது. சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அவ்வப் போது குழந்தைகள் உள்பட சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். துருக்கியில் 147 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி பத்தரமாக மீட்கப்பட்டு உள்ளார்.

இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாலும் அங்கு கடுமையான குளிர் நிலவி வருவதாலும் கட்டிட இடி பாடுகளில் உள்ளவர்கள் உயிர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இன்றும் பலரது உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டி உள்ளது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்தும், உறவினர்களை பறிகொடுத்தும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்ணீர் மல்க சோகத்துடன் காத்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க பிணமாக மீட்கப்பட்டவர்களின் உடல்கள் கொத்து கொத்தாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக இருக்கிறது. துருக்கி மாராஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் பேர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்காக ராட்சத எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது. உடல்கள் வாகனங்களின் மூலம் அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் அவர்களை கண்டுபிடிப்பதில் உறவினர்கள் கடும் சிரமத்தை மேற்கொண்டனர். அவர்கள் யார்? என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் உடல்கள் தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த காட்சிகளால் துருக்கியில் திரும்பும் திசையெல்லாம் அழுகுரல்கள் கேட்பதோடு சோகமயமாகவும் காட்சி அளிக்கிறது. 

Share this story