போதையை ஊக்குவிக்கும் குடும்ப அரசியல்வாதிகள்..! - மோடி ஆவேசம்..
![pmn6](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/9b1e0ce6eda1313237e832ee40ed8845.jpg)
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), ராதிகா சரத்குமார் (விருதுநகர்), ஜான்பாண்டியன் (தென்காசி), எஸ்டிஆர் விஜயசீலன் (தூத்துக்குடி), விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது,
“இனிய தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். இந்த புண்ணிய பூமியான திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மையை வணங்குகிறேன்” என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழ் புத்தாண்டில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நல்ல பல திட்டங்களை சொல்லியுள்ளோம். 3 கோடி வீடுகள், முத்ரா திட்டத்தில் அதிகமானோருக்கு கடன், விவசாயம், மீன்வளத்துறை, கடல் பாசி, முத்து வளர்ப்புக்கு உதவிகள் என்று பல்வேறு திட்டங்களை சொல்லியுள்ளோம். வளர்ந்த தமிழகம்தான் வளர்ந்த பாரதமாக மாறும். நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்குகிறது. மிக விரைவில் புல்லட் ரயில் தொடங்குவோம்.
தமிழ் மொழியை நேசிக்கும் எல்லோரும் பாஜகவை நேசிக்க ஆரம்பித்துள்ளீர்கள். இதனால் தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெறப்படும் என சொல்லியுள்ளோம். தமிழகத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற வைப்போம். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும். திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் கச்சத்தீவை துண்டித்து வேறுநாட்டுக்கு கொடுத்தனர். இவர்கள் செய்த துரோகத்தால் மீனவர்கள் பல தலைமுறைகளாக தண்டிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு போதையை நோக்கிச் செல்கிறது. இங்கு குடும்ப அரசியலில் உள்ளவர்கள் அதை ஊக்குவிக்கிறார்கள். பலகோடிக்கு போதை வர்த்தகம் நடக்கிறது. போதை மாஃபியா யாருடைய பாதுகாப்பில் இருக்கிறது என்பது குழந்தைக்கு கூட தெரியும். போதை பொருட்கள் நடமாட்டத்தை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இதனை வேடிக்கை பார்க்கமாட்டேன்.
இந்த தேர்தல் பிரச்சார கூட்டம்தான், நடப்பு தேர்தலுக்காக தமிழகத்தை நான் சந்திக்கும் கடைசி கூட்டமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
இறுதியில் அனைவரும் செல்போனில் லைட் எரியவைத்து ஆதரவு தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அதன்படி அனைவரும் செல்போனில் லைட் எரியவைத்து ஆதரவு தெரிவித்தனர்.