தக்காளி விற்பனை செய்து ரூ.4 கோடி சம்பாதித்த விவசாயி..

By 
tomo

நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

தக்காளி விவசாயம் செய்த விவசாயிகள் சிலர், ஒரு சில மாதங்களில் லட்சாதிபதியாகவோ அல்லது கோடீஸ்வரர்களாகவோ மாறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி (வயது 48). கூட்டுக்குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது. தக்காளி விவசாயத்தில் அதிக லாபம் அடைந்தது குறித்து விவசாயி முரளி கூறியதாவது:

கடந்த 8 ஆண்டுகளாக தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் எனக்கு ரூ.1.5 கோடி கடன் ஏற்பட்டது. அடிக்கடி மின்தடையால் விளைச்சலும் சரியாக இல்லை.

ஆனால் இந்தாண்டு எனக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது. எனது நிலத்தில் விளைச்சலும் அமோகமாக இருந்தது. இதுவரை 35 முறை அறுவடை செய்துவிட்டேன். எனது வயலில் இன்னும் 15 முதல் 20 முறை தக்காளி அறுவடை செய்யலாம். தக்காளிக்கு கோலார் வேளாண் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், 130 கி.மீ. தூரம் பயணம் செய்து தக்காளியை விற்பனை செய்கிறேன்.

கடந்த 45 நாளில் ரூ.4 கோடிக்கு தக்காளியை விற்பனை செய்தேன். இந்த பணம் மூலம் மேலும் நிலத்தை வாங்கி தோட்டக்கலையை நவீன தொழில்நுட்பத்துடன் மிக பெரிய அளவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். சில நேரங்களில் விவசாயத்தில் விளைச்சல் தோல்வியடைந்து கடன் ஏற்படலாம். ஆனால் விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்து, அந்த தொழிலை மதிப்பவர்கள் ஒரு போதும் தோல்வியடையமாட்டார்கள். இவ்வாறு முரளி கூறினார். 
 

Share this story