இந்தியாவுக்கு, தலிபான்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை.
'ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இந்தியாவுக்கு தலிபான்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் துவங்கியதும், கடந்த ஆகஸ்ட் 15 தேதி தலிபான்கள் நாட்டை கைப்பற்றினர்.
காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க ராணுவம், ஆகஸ்ட்30-ம் தேதி அங்கிருந்து வெளியேறியது.
எனினும், குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கான வழக்கமான அனைத்து வர்த்தக விமான சேவைகளையும், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா நிறுத்தி இருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கக்கோரி, இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது.
தற்போது, இந்த கடிதம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.