கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு, இரண்டு ஆண்டுகளாக பூ, பொட்டுடன் வலம் வந்த மனைவி..
![illegallove](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/33b45c4a91888317e858bc063b896e3d.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ஸ்ரீகாந்துக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல ஆர்த்தி திட்டமிட்டார்.
அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு சமாதானம் பேசுவது போல சைநாக பேசி தேவகோட்டை அருகே உள்ள இலக்கினி வயல் காட்டுப்பகுதிக்கு ஸ்ரீகாந்தை மது அருந்த இளையராஜா அழைத்துச் சென்றார். அங்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து அங்கேயே புதைத்துள்ளார். கணவர் இறந்தது தெரிந்தும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தாலி, பூ, பொட்டுடன் ஆர்த்தி வலம் வந்துள்ளார்.
ஊரில் கேட்பவர்களிடம் குடும்ப பிரச்சனையால் கணவர் கோபித்துக்கொண்டு வெளியூர் சென்று விட்டதாக கூறி, சுமார் இரண்டரை ஆண்டுகளாக ஆர்த்தி நாடகமாடி வந்துள்ளார். இதனிடையே எப்படியோ ஶ்ரீகாந்த் கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஆர்த்தி மற்றும் இளையராஜாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கொலை செய்தது உறுதியானது.
இந்நிலையில் ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.