நாளை முதல், கூடுதல் கட்டுப்பாடுகள் : மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
 

By 
From tomorrow, additional restrictions District Collector Notice


கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :

கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

அண்டை மாநிலங்களில், தொற்று அதிகரித்து வருவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 

கூடுதல் கட்டுப்பாடுகள் :

அதில், தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்துக்கு கூடுதலாக நாளை திங்கட்கிழமை முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள பால், மருந்தகங்கள், காய்கறி கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

தடை விதிப்பு :

கோவை மாநகராட்சியில், கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

கண்காணிக்க உத்தரவு :

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில், மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி. சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. 

50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பரிசோதனைச் சான்றுகள் :

கேரள- தமிழக மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச் சாவடி அமைத்து, கண்காணிக்கப்படுகிறது. 

அந்த வழியாக வரும் வாகனங்களில், பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைச் சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். 

சான்று உள்ளவர்கள் மட்டுமே, கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சான்று இல்லாதவர்களுக்கு, சோதனைச் சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story