பொதுத்தேர்வு சரியானது அல்ல : தமிழக பள்ளிக்கல்வித் துறை தகவல்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளியில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 80 மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கினார். பின்னர், அவர் கூறியதாவது :
இன்று திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளியில், 80 கையடக்க கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லுகின்றபோது, கூட்ட நெரிசலாக இருப்பதால், பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்து, சிலர் விபத்தில் சிக்குகிறார்கள்.
இதனால், அவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதியும் தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பேருந்தில் எவ்வாறு பயணம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மூன்றாவது படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு என்பது சரியானது அல்ல. ஏனென்றால், 5-வது படிக்கின்ற பொழுது தான், மாணவர்களுக்கு தான் இதைத் தான் படிக்க வேண்டும், இதை படித்தால் தான் இந்த உயரத்திற்குச் செல்ல முடியும் என்று ஆசை எண்ணங்கள் தோன்றும்.
மூன்றாவது படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்றால், அது அவர்களால் சமாளிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
தமிழகத்தில், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அவை உள்பட பள்ளிக்கல்வித்துறை சார்பில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சார்பில், விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில், ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். வரவிருக்கும் கூட்டத்தொடர்களில், முடிவுகள் எடுத்து நல்ல திட்டங்கள் அதிகமாக அறிவிக்கப்படும்.
படிப்படியாக, பள்ளிக் கல்வித்துறையில் அதிகமாக நலத்திட்டங்களை தமிழக முதல்வர் தலைமையில் நிறைவேற்றி வருகிறோம்.
இந்தியாவில் உள்ள தலை சிறந்த கல்வி நிறுவனங்களில், அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து படிக்கவேண்டும். அதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு இத்தகைய கையடக்க கணினிகள் வழங்கி, சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் மாணவர்கள் பெருமை தேடித் தரவேண்டும்' என்றார்.
*