சென்னையில் மீண்டும் கனமழை : வானிலை மையம் அறிவுறுத்தல்
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.,17, 18-ம் தேதிகளில் சென்னையில், மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
'தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து, வட கேரளா தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக, தென்மேற்கு வங்கக் கடல் வரை காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக,
இன்று (15-11-2011) ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை :
நாளை (16-11-2021) ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி ,திண்டுக்கல் ,திருப்பூர் ,சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17 மற்றும் 18-ந்தேதி :
17 மற்றும் 18-ம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
நேற்றைய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவுகிறது .
இதனால், இன்று மன்னார் வளைகுடா பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
போக வேண்டாம் :
17 மற்றும் 19 தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் கேரள கடலோர பகுதிகள், கர்நாடகா கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.