அனல் பறக்கும் தேர்தல் களம்; கோவையில் ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின்..

By 
kovai8

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

வழக்கமாக தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கிடையே தான் போட்டி இருக்கும் என்ற நிலையில், தற்போது பாஜக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பன்னீர்செல்வம் அணி மூன்றாவது அணியாக உருபெற்று தமிழகத்தில் மும்முனை போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றியை உறுதி செய்யும் வண்ணம் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தமிழகத்தில் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் வாகன பேரணியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் வருகின்ற 12ம் தேதி கோவையில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி என இருவரும் கலந்து கொள்கின்றனர். கோவை செட்டிப்பாளையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டணிக்கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, கமல்ஹாசன், முத்தரசன், கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் பலரும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Share this story