இஸ்ரோவின் ஆதித்யா எல்1 எத்தனை ஆண்டுகள் செயல்படும்? என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

By 
aditya

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஆதித்யா எல்1 விண்கலம் 5 ஆண்டுகள் செயல்படும். சூரியனின் மேற்பரப்பில் நிகழும் பல்வேறு மாற்றங்களை ஆய்வு செய்யும்.

சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 திட்டமிட்டபடி எல்1 புள்ளியை வெற்றிகரமாக அடைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பைத் தொடர்ந்து இந்தியாவும் தனது சூரியன் குறித்த ஆய்வைத் தொடங்கி சாதனையைப் புரிந்துள்ளது.

விண்வெளியில் சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் பகுதி லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் இந்த லெக்ராஞ்சியன் புள்ளியை முதன்முதலில் ஆய்வு செய்தவர் ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச். அவரது நினைவாகவே லெக்ராஞ்சியன் புள்ளி என்று பெயர் சூட்டப்பட்டது.

L1 எனப்படும் இந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு சூரியனின் செயல்பாடுகளையும் விண்வெளியில் அதன் தாக்கங்களையும் கவனிக்க முடியும்.

ஆதித்யா எல்1 மேற்கொள்ளும் ஆய்வுகள்:

ஆதித்யா-எல்1 சூரியனின் மேல் வளிமண்டலம் (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) மற்றும் சூரியக் காற்றுடன் அதன் தொடர்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய வளிமண்டலத்தில் பகுதியளவு அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல் குறித்து அறிந்துகொள்ளவது இதன் நோக்கம் ஆகும்.

விண்கலம் சூரிய கரோனாவை வெப்பமாக்கும் வழிமுறைகளை ஆராயும். கரோனல் மாஸ் எஜெக்‌ஷன்ஸ் (CMEs) மற்றும் சூரிய எரிப்புகளின் துவக்கம் மற்றும் வளர்ச்சியையும் கவனிக்கும்.

இது சூரியனுக்கு அருகில் உள்ள பிளாஸ்மா சூழலை ஆய்வு செய்து சூரிய கரோனாவில் உள்ள காந்தப்புலத்தை வகைப்படுத்தும். விண்வெளி வானிலை குறித்தும் ஆய்வு செய்யும்.

ஆதித்யா எல்1 ஆய்வுக் கருவிகள்:

ஆதித்யா எல்1 விண்கலத்தில் சூரியனின் கரோனா, குரோமோஸ்பியர், ஃபோட்டோஸ்பியர் மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை ஆய்வு செய்ய ஏழு பேலோடுகள் பொருத்தப்பட்டிருக்கும்.

நான்கு ரிமோட் சென்சிங் பேலோடுகள் (VELC, SUIT, SoLEXS, HEL1OS) சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களில் படம்பிடிக்கும். இதில் புற ஊதா மற்றும் எக்ஸ்-கதிர்கள் அடங்கும். ASPEX, PAPA, டிஜிட்டல் காந்தமானிகள் ஆகிய மேலும் மூன்று பேலோடுகள் சூரியக் காற்றையும் மகாந்தப்புலத்தை அளவிடும்.

Share this story