இது முகூர்த்த நேரம் : இன்று ஒரே நாளில், 150 ஜோடிக்கு திருமணம்..

தமிழகத்தில் பொது போக்குவரத்து, வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிபந்தனைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவில்களில் திருமணம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேவநாதசாமி கோவில் :
இந்நிலையில், முகூர்த்தநாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு, திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் மலைமீது உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து, திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு உள்ள சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும், திருவந்திபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களிலும் 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த பகுதியில், இன்று ஒரே நாளில் 150 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடைபெற்ற பெரும்பாலான திருமணத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவியது.
கோரிக்கை :
ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், திருவந்திபுரம் பகுதிக்கு இன்று காலை மணமக்களின் உறவினர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் அதிகமானோர் வந்ததால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.