அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள், இதோ துள்ளிக்கிட்டு வருகுது..
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு, உலகப் பிரசித்தி பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3-வது நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவார்கள்.
கட்டுப்பாடுகள் :
கொரோனா தொற்று பரவல் காரணமாக, முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் உள்ளன. ஆனாலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி, ஒரு போட்டியில் 300 வீரர்கள், 700 காளைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும், போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் வருகை :
இந்நிலையில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து மாடுகளைப் பிடித்து வருகின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் களத்திற்கு அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வருகை தந்தனர்.
மேலும், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால், வழக்கத்தைவிட கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*