குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை.? - டெல்லி போலீஸ் விளக்கம்..

By 
cat

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக நேற்று முன் தினம் பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர் மோடி தவிர 71 பேர் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின் போது மர்ம விலங்கு ஒன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் தென்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி. துர்காதாஸ் உய்கி என்பவர் பதவியேற்றதும் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து பதவியேற்பு ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டு எழுந்து குடியரசுத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தபோது, அவருக்கு பின்னால் உள்ள படிக்கட்டுகளுக்கு மேலே விலங்கு ஒன்று நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளில் உள்ள அந்த விலங்கு சிறுத்தை என போன்று உள்ளதாக சிலர் கூறி வந்தனர். சிலரோ அது பூனை என கூறினர். இது தொடர்பான செய்திகள் பல்வேறு தளங்களில் வந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் தென்பட்ட விலங்கு தொடர்பாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தென்பட்ட விலங்கை காட்டு விலங்கு என சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால், அது உண்மையல்ல. கேமராவில் தென்பட்ட விலங்கு வீட்டு பூனை. எனவே, தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.” என பதிவிடப்பட்டுள்ளது.

Share this story