சவுக்கு மீடியா நிறுத்திவைப்பு.! என்ன காரணம் தெரியுமா?

By 
savukku10

முடக்க முயலும் நெருக்கடிகளால் சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மே 4ம் தேதி தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும், சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கரின் சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சவுக்கு மீடியா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அன்புக்குரிய தமிழக மக்களுக்கும், சவுக்கு ஊடகத்தை பின்தொடர்பவர்களுக்கும் வணக்கம்! இதுவரை உங்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த சவுக்கு ஊடகம் மற்றும் அதன் நிறுவனரான சவுக்கு சங்கரை முடக்கும் விதமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நன்கு அறிவீர்கள்.

சவுக்கு என்பது ஒரு குடும்பம். அதில் நீங்களும் ஓர் அங்கம். உங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். நீதித்துறையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. காலம் வரும் வரை காத்திருப்போம். நன்றி சவுக்கு ஊடகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this story