மு.க.ஸ்டாலின் இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார்: ஆளுங்கட்சியை நோக்கி  அண்ணாமலை சரமாரி கேள்வி..

By 
dmkbjp10

மதுரையில் 30 கிலோ மெத்த பெட்டமைன் சிக்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டி இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 

சென்னை திமுகவின் மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புள்ள இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்கும் மூலப்பொருள்களைப் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வந்த நிலையில் தலைமறைவான அவரது வீடு சீல் வைக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரகாஷ் (42) என்பவரிடம் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்த பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக்கொண்டிருக்கும் வேளையில் மு.க.ஸ்டாலின் இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார் என அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக,  நமது மாநிலத்தை மாற்றியதற்காக மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது, தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், இன்று ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்த பேட்டமைன் போதைப் பொருள், நுண்ணறிவுத் துறையால் மதுரையிலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக்கொண்டிருக்கும் வேளையில் மு.க.ஸ்டாலின் இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார். இனிமேலாவது அவர் விழித்தெழுந்து நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மக்களின் கவனத்தை இதிலிருந்து முக்கியமற்ற பிரச்சினைகளுக்குத் திசைதிருப்ப, தனது கூட்டத்தை பயன்படுத்தப் போகிறாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this story