மோடிக்கு துணிச்சல் இல்லை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

By 
mks88

இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவை பற்றிப் பேசலாமா?” என்று வேலூரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரை அறிமுகப்படுத்தி, பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "என்னைப் பொறுத்தவரை, உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பவன்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். ஒவ்வொரு நாளும், நான் என்ன என்ன பணிகளைச் செய்கிறேன், என்ன திட்டங்களை மக்களுக்காகக் கொண்டு வருகிறேன், எங்கெல்லாம் பயணிக்கிறேன் என்று உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். ஏன் என்றால், என்னுடைய பொது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.

ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டதால், தமிழகத்துக்குச் சில ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதிகள் வருகிறார்கள். யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். யார்? பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் வருவார். வெள்ளம் வந்தால் வர மாட்டார். நிதி கேட்டால் கொடுக்க மாட்டார். சிறப்புத் திட்டம் கேட்டால் செய்ய மாட்டார். இப்படி, மக்களை ஏமாற்றி, தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் பார்ட்-டைம் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் தமிழகத்துப் பக்கமே வரமாட்டார்கள

இண்டியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொருவரின் வாக்கும், தமிழகத்தை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தமிழகத்தை வெறுக்கும் பிரதமர் மோடிக்கு பதிலாக, இண்டியா கூட்டணியின் சார்பில் பிரதமர் ஆகப் போகிறவர், நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின்மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள்மேல் உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கும் பண்பும் ஏன், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, பெரும் துணையாக இருப்பவராக இருப்பார்.

நாம் செய்துள்ள சாதனைகள், பத்தாண்டு கால அதிமுக அவல ஆட்சியின் இருளை அகற்றி, தமிழகத்துக்கு விடியலை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்றைக்குக் காலையில் நான் பெருமைகொள்ளும் ஒரு செய்தியை “சோசியல் மீடியா” என்ற சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். நம்முடையத் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. இன்றைக்கு கனடா நாட்டில், காலை உணவுத் திட்டம் கொண்டு வந்துள்ளார்கள்.

அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி. இப்போது பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு, புதியதாக சிறுபான்மையினர் மேல் அக்கறை வந்தது போன்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று மோடியும், அமித் ஷாவும் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சட்டம் 2019-ல் மாநிலங்களவையில், அதிமுகவும் - பாமகவும் ஆதரித்து ஓட்டு போட்டதால்தான், இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வந்திருக்கிறது. எவ்வளவு பெரிய துரோகத்தைச் சிறுபான்மையின மக்களுக்கு செய்துவிட்டு, இப்போது அந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்வது, பசப்பு நாடகம் இல்லையா?

இதில் கடந்த 5 ஆண்டில் நம்முடைய எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்? மத்திய அரசு மக்கள் விரோதச் சட்டங்கள் கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவு போராட்டம் நடத்தினோம். உதாரணத்துக்கு, இந்த சிஏஏ சட்டம் வந்தபோது, திமுகவும் தோழமைக் கட்சிகளும்தான் உறுதியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, எதிர்த்து வாக்களித்தது. பழனிசாமி என்ன செய்தார்?

நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல, அதில் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார் என்று, அட்டர்னி ஜெனரல் மாதிரி லா பாய்ண்ட் எல்லாம் பேசினார். இந்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாகப் போராடிய மக்கள்மேல், பெண்கள் - குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் லத்தி சார்ஜ் செய்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்துச் சென்னையில் போராடிய என் மேலும், ப.சிதம்பரம், திருமாவளவன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, உதயநிதி உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மேல் ஒரே நேரத்தில் FIR போட்டு மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தன்னுடைய விஸ்வாசத்தை வெளிக்காட்டினார் பழனிசாமி.

ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல், சிஏஏக்கு எதிராகக் கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தி, இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினோம். அதுமட்டுமா, நான் ஏற்கெனவே சொன்னேனே, “சிஏஏ ரத்து செய்வதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த உடனே” ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏக்களுடன், அவையை விட்டே ஓடிவிட்டார் பழனிசாமி. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். இதேபோன்று ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்து, பொடா சட்டத்தை ரத்து செய்தோம். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, சிஏஏவும் ரத்து செய்யப்படும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு மட்டுமல்ல, பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழக மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார் பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தார். எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று உழவர்களின் துயரத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டே, பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தார் பழனிசாமி.

இந்த லட்சணத்தில் “நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம், எப்படி மோடியை எதிர்க்க முடியும். ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்ப்பேன்” என்ற வியாக்கியானம் பேசுகிறார். மக்கள் விரோதச் சட்டங்கள் எல்லாம் கொண்டு வந்தபோது, அந்த புலிப்பாண்டி எலிப்பாண்டியாக மாறி பாஜக காலில் விழுந்து கிடக்கிறார். இத்தனையையும் செய்துவிட்டு, கரகாட்டகாரன் படத்தில் கவுண்டமணி காமெடி வருமே, “நாதஸ் திருந்திட்டான்…” என்று அதுபோன்று இப்போது பேசிக் கொண்டு, வாக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

சொரணையும், சுயமரியாதையும் இல்லாத பழனிசாமி போன்று இல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எந்த நிலைமையிலும் மக்கள் விரோத பாஜக அரசை திமுக எதிர்க்கும். தமிழக உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும். அதிமுக அடிமைக் கூட்டம் போன்று, பாஜகவை எதிர்க்க வக்கில்லாமல், அதற்கு எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான் தமிழக உரிமைக்காகப் போராடினோம். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும், ஆளுநரின் அத்துமீறல், தமிழகத்துக்கான நிதி என்று எல்லா பிரச்சினையிலும் உச்ச நீதிமன்றம் வரை சென்று, பாஜக அரசுக்கு எதிராக வாதாடி நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுகிறோம்.இன்றைக்குப் பிரதமராக இருக்கும் மோடி, மாநிலங்களை இல்லாமல் ஆக்க நினைக்கிறார்.

குஜராத் முதல்வராக இருந்தவருக்கு, இப்போது மற்ற முதல்வர்களைப் பார்த்தாலே கசக்கிறது. மாநில உரிமைகளைப் பறிக்கிறார். மாநிலங்களுக்கு வரும் நிதியைத் தடுக்கிறார். தமிழகத்துக்கு ஒரு சிறப்புத் திட்டம்கூட தர மறுக்கிறார். மாநில மொழிகளைப் புறக்கணிக்கிறார். எதைச் சரியாகப் பண்ணுகிறார் தெரியுமா? போகும் ஊருக்குத் தகுந்த உடை மட்டும் அணிகிறார். அந்த ஊரையும், ஊர் மக்களையும், அவர்கள் மொழியையும் பண்பாட்டையும் மதிக்கிறாரா? சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்துவிட்டு, அன்னைத் தமிழுக்குக் கிள்ளிக் கூட தர மறுக்கிறார்.

கூட்டாட்சி என்று சொல்வார்… ஆனால், காட்டாட்சி நடத்த அத்தனை வேலையும் பார்ப்பார். அதனால்தான், அவரால் மக்களிடம் தன்னுடைய ஆட்சி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. உடனே என்ன செய்கிறார். பழைய சம்பவங்களைப் பற்றி பொய்யான கதைகளைச் சொல்லி, அதுமூலமாக மக்களை குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா? என்று முயற்சி செய்கிறார். அதுதான் கச்சத்தீவு பிரச்சினை.

இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைப் பற்றி இப்போது பாஜக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பாஜக மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.

2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜக உச்சநீதிமன்றத்தில் என்ன கூறியது? “கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியது. இந்தப் பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா?

இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவுக்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்துக்கு வரவில்லை. நேரு காலத்தில் நடந்தது - இந்திரா காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?

பிரதமர் மோடிகடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 26-ம் நாள் சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன். அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே, “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்” என்றுதான் கோரிக்கை வைத்தேன். ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இதுவரை படித்துப் பார்த்தீர்களா? எத்தனை கதைகள்,எத்தனை நாடகங்கள்.

முதலில், ஆர்டிஐ விண்ணப்பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்? இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர், “2015-ல் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை” என்று, பாஜக அரசு தகவல் கொடுத்திருக்கிறது. இப்போது தேர்தல் வருகிறது என்று தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்?

மூன்றாவது, கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதெல்லாம், அதற்கு உரிய பதிலைச் சொல்லவில்லை. எத்தனையோ பேர் ஆர்டிஐ விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தகவல்களைக் கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லாமல் இருந்த பாஜக அரசு, இப்போது ஆர்டிஐ மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத்தார்கள்? பாஜகவைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி, வெளியுறவுத் துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்?

நான்காவது, கச்சத்தீவுக்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை? இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந்தாரா? அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?

பிரதமர் மோடி போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில், ED, IT,CBI என்ற மத்திய அரசின் அமைப்புகளை பாஜகவின் கைப்பாவையாக மாற்றி, அவர்களை ரெய்டுக்கு அனுப்புவது, பிறகு பாஜகவுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை.

இந்த ஊழல் வெளிவந்ததால், பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். சமவாய்ப்புடன் தேர்தல் நடந்தால் பாஜக ஆட்சிக்கு சாவுமணி அடிப்பது உறுதி என்று தெரிந்ததால்தான் எல்லா பக்கத்தில் இருந்தும் இப்படி அநியாயம் மேல் அநியாயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை ஆணையர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடியும் வரை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்லிப் பின்வாங்கியிருக்கிறார்கள். பாஜக மேல் மக்கள் கோபம் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்று அவர்களுக்கு புரிந்துவிட்டது. அதனால்தான், அந்தர் பல்டி அடிக்கிறார்கள்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்ததும் எவ்வளவு பெரிய தவறு என்று பாஜக விரைவில் உணரத்தான் போகிறது. சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் பாஜகவிடம் நீதி, நேர்மை,நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம்.

மாநிலங்களை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தலாம் என்பதில்தான் பாஜகவின் மொத்தச் சிந்தனையும் இருக்கிறது. ஒன்று, மாநிலங்களுக்கான நிதி தராமல் முடக்குவது. இல்லை என்றால், ஆளுநர்களை வைத்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் முடக்குவது. இந்த அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லோரும் நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாமும் போயாகிவிட்டது. செய்தி 2 நாளில் வரும். பாருங்கள்.

நேற்றுகூட, கேரள மாநில அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சென்று வாதாடினார்கள். கர்நாடக அரசு நீதிமன்றம் சென்று வறட்சி நிவாரணம் தரச் சொல்லுமாறு வாதாடுகிறார்கள். நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக் கேட்டுப் பார்த்தோம். தரவில்லை. நாளை காலை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறோம். பணம் தராதது மட்டுமல்ல, நமது மாநில அரசு தன்னுடைய நிதியில் இருந்து கொடுத்த பணத்தையும், பிச்சை என்று நக்கலடித்தார் பாஜக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மக்களோடு மக்களாக, மக்களுக்கு நெருக்கமாக இருப்பது மாநில அரசுகள்தான். மாநிலங்கள் நீதி பெறவும் உச்சநீதிமன்ற கதவுகளைத்தான் தட்ட வேண்டும்; நிதி பெறவும் உச்சநீதிமன்ற கதவுகளைத்தான் தட்ட வேண்டும் என்றால், இதற்கு எதற்கு மோடி பிரதமர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார் என்பதுதான் என்னுடைய கேள்வி.

இந்த நிலைமை மாற வேண்டும். அதற்காகத்தான் மாநில உரிமைகளுக்கான முழக்கத்தையும், கூட்டாட்சிக்கான குரலையும் தொடர்ந்து எழுப்புகிறோம். அதற்கு நீதிமன்றம் போன்றே மக்கள் மன்றமும் இந்தத் தேர்தலில் நியாயத் தீர்ப்பு எழுத வேண்டும். தமிழுக்கும் தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் விரோதமான கட்சி பாஜக. பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழகத்தை வஞ்சித்த பாஜக தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக இரண்டையும் ஒரு சேர வீழ்த்துங்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Share this story