சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம்; காரை பஞ்சராக்கி தம்பியை ஓட ஓட வெட்டி சாய்த்த அண்ணன்- ஓசூரில் பரபரப்பு..
![osr](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/63fa7ae2d3e8b66475d1f5eaec93b598.jpg)
ஓசூரில் சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த தம்பியை அண்ணனே கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த லாலிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்(வயது 35). இவரது உடன்பிறந்த அண்ணன் மஞ்சுநாத்(40). இருவருக்கும் சொத்து தகராறு காரணமாக விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓசூர் அடுத்த சானமாவு என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த தம்பி தேவராஜை, அண்ணன் மஞ்சுநாத் தனது கூட்டாளிகள் இருவருடன் இணைந்து காரை வழிமறித்து கார் சக்கரத்தை பஞ்சராக்கி உள்ளனர்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய தேவராஜை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியும், இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்து தலைமறைவாகி உள்ளனர். உயிரிழந்த தேவராஜின் உடலை கைப்பற்றிய உத்தனப்பள்ளி போலிசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவராஜ் சொத்து தகராறு காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவும் விசாரித்து வருகிறார்கள். உடன்பிறந்த தம்பியை, அண்ணன் கூட்டாளிகளுடன் இணைந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.