திருமணம் நடந்த சில மணி நேரத்தில், வாயில் நுரை தள்ளி உயிரிழந்த புதுமாப்பிள்ளை.! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..

By 
astmarriage9

சென்னையில் திருமணம் நடந்த சில மணி நேரத்தில், வாயில் நுரை தள்ளி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் 6-வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (40). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும் திருச்சியை சேர்ந்த ராஜலட்சுமி(36) என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்யப்பட்டதை அடுத்து ஜூன் 9ம் தேதி  திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, திருப்போரூர் முருகன் கோவிலில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, மணமக்கள் மற்றும் உறவினர்கள் பெரவள்ளூரில் உள்ள மணமகன் லோகேஷ் வீட்டுக்கு வந்தனர். மணமக்கள் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக்குகொண்டிருந்தனர்.

அப்போது, லோகேஷ்க்கு திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் அலறியதை அடுத்து உறவினர்கள் லோகேஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் கதறி அழுதுள்ளார். இது குறித்து திரு.வி.க.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே லோகேஷ் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர். மணமகள் ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது முதல் கணவர் கொரோனா காலத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் 2-வதாக திருமணம் செய்த அன்றே 2-வது கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story