நிர்மலா சீதாராமன், டிராவிட், மம்முட்டி, சுரேஷ் கோபி, வாக்குப்பதிவு.. விறுவிறுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் களம்..

By 
praj

நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 88 தொகுதிகளில் மொத்தம் 1202 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இதில், 1098 ஆண்கள், 102 பேர் பெண் வேட்பாளர்கள்.இன்றைய தேர்தலில் 15.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர்.   ஒரு லட்சத்து 67 ஆயிரம்  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட தேர்தலானது கேரளாவில்  20 தொகுதிகளிலும்,  கர்நாடகாவில்  14 தொகுதிகளிலும், ராஜஸ்தான் 13 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள்சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணத்தால், அந்த தொகுதியில் மட்டும் மே7ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதனிடையே, இந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆலப்புழாவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மத்திய  அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் தொகுதியிலும், நடிகை ஹேமமாலினி  உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகர் மம்முட்டி, நடிகர் பிரகாஷ் ராஜ், இந்திய அணி கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். 

Share this story