இனி, தமிழ்நாட்டில் திமுகவை தேடினாலும் கிடைக்காது: பிரதமர் மோடி பேச்சு..

By 
tu4

2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து மதுரை சென்ற அவர் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை தூத்துக்குடி சென்ற அவர் அங்கு ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் என்று தெரிவித்தார். மேலும் ” தமிழ்நாடு மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது. மத்திய பாஜக அரசு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது. உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம். தமிழ்நாடு மக்கள் வருங்காலத்தை பற்ரி மிகத் தெளிவுடன் இருக்கின்றனர்.

பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழ்நாடு மக்களுடன் ஒத்துப்போகிறது. டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தூரம் குறைந்துவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டில் 1 கோடி வீடுகளுக்கு மேல் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 40 லட்சம் குடும்பங்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் பெண்களை சேர்ந்துள்ளது என்பதால் அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது “ மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்த தமிழ்நாட்டின் எல். முருகன் மத்திய அமைச்சரவையில் இருக்கிறார். தமிழ்நாட்டு நலனுக்காக நாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு இங்குள்ள மாநில அரசு தடுத்து வருகிறது. நாட்டை கொள்ளையடிக்கவே திமுக அரசு வளர்ச்சியை தடுக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏன் தடுக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். 

மதுரையில் இருந்து தமிழக மக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இந்தியா 100 மடங்கு முன்னேறினால், தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேற வேண்டும். திமுக பொய்வேஷம் போடுகிறது, திமுக பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது. திமுகவால் இங்கு இருக்க முடியாது. திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது.

ஏனெனில் இங்கு அண்ணாமலை இருக்கிறார். பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும்.. திமுக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவிகளில் வகித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏழை எளிய மக்களை பற்றி கவலை இல்லை. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனே முக்கியம். என்று மோடி விமர்சித்தார்.

மத்திய அரசின் சீரிய திட்டங்களால் உலக அளவில் இந்திய மக்களுக்கான மரியாதை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்களை மற்ற நாட்டினர் வியப்புடன் பார்க்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகள் என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் உட்கட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி பெறும். செயற்கை நுண்ணறிவு துறை இந்தியாவின் வளர்ச்சி புதிய உயரத்தை எட்டும்.

2024 தேர்தலில் வளர்ச்சியையும், தொலைநோக்கு பார்வையை கொண்டு பாஜக நிற்கிறது. ஆனால் திமுகவும் காங்கிரஸும் இதற்கு எதிராக நிற்கிறது. மக்களைவிட குடும்ப நலனே முக்கியம் என்று நினைக்கின்றனர். அவர்களின் எண்ணம் ஈடேறப்போவதில்லை. சுயநலத்தோடு வரும் கட்சிகளை தமிழ்நாடு கண்டிப்பாக நிராகரிக்கும். குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருவோருக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

Share this story