அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்..

By 
rnv

பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர் பற்றி பொய்யான கருத்துக்களை பேசி பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் புகார் அளித்திருந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் பேரில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக ஆளுநரிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரியிருந்ததாகவும், அதன்பேரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக வெளியாகியிருந்த செய்திக் குறிப்பில், பதற்றத்தை உருவாக்குதல், பொய் செய்தி பரப்புதல் புகாரிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதற்காக அவரை கைது செய்யக் கோரி தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,

“1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொண்டு பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி. ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என பேசினார்.

அண்ணாமலையின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தாம் பேசியது உண்மை எனவும், ஆங்கில இந்து நாளிதழ் 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதுகுறித்து செய்தி வெளியிட்டது என்றும் விளக்கம் அளித்தார். ஆனால், அண்ணாமலையின் கருத்து குறித்து விளக்கம் அளித்த தி இந்து நாளிதழ், “1956 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்திகளை ஆராய்ந்தால்,

மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவின் நான்காவது நாளில் முத்துராமலிங்கத் தேவர் அண்ணாதுரையின் கருத்தில் முரண்பட்டார். ஆனால் அண்ணாதுரை வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்டதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை.” என விளக்கம் அளித்தது.

இந்த பேச்சின் மூலம் அண்ணாமலை பொய்யான கருத்துக்களை பேசி பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story