குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடக் கூடாது:  முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By 
pc43

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.3) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க உரையாக முதல்வர் பேசியது: "தமிழகத்தில் நமது அரசு பொறுப்பேற்று நடைபெறக்கூடிய இந்த இரண்டாவது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநாட்டில், உங்கள் அனைவரையும் ஒருசேர சந்திப்பதில் மகிழ்ச்சி.

முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 10 அன்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடந்தது.'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட போதும், மாவட்ட ஆட்சியர்களை, காவல்துறை கண்காணிப்பாளர்களை சந்தித்து இருக்கிறேன். தொடர்ச்சியாக உங்களை சந்தித்து வருகிறேன்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை, எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாகக் கொண்டு வழங்கிட வேண்டும். இன்று காலையில் நடைபெறும் இந்த அமர்வில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து நாம் விவாதிக்க இருக்கிறோம்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது, பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை முழுமையாகத் தடுப்பது. அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும்.

கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இது நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும். சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதனைக் குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும்.சமீப காலத்தில், தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மற்றும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது.

தற்போதைய காலகட்டத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூகஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்குரிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.

முன்னுரையாக சில கருத்துகளை நான் கூறினேன். நான் குறிப்பிட்ட ஆலோசனைகள் பற்றியும், இதனைத் தாண்டியும் பல்வேறு நடப்புகள் குறித்தும், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேரவும் உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளையும் செயல்திட்டங்களையும் இங்கு வழங்குங்கள்.

கருத்துகளைச் சொல்ல இருப்பவர்கள் சுருக்கமாகவும், அதே நேரத்தில், தெளிவாகவும் சொல்ல வேண்டும். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டமைப்புக்கு வேண்டிய வசதிகள் குறித்து, இக்கூட்டம் முடிந்த பிறகு, துறைத் தலைவர்களிடம் நீங்கள் முறையிட்டு தீர்வு காணலாம். எனவே, மாவட்ட நிர்வாகம், சட்டம் -ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து மட்டும் இங்கே கருத்துகளைப் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.உங்களது கருத்துகளுக்கும் - ஆலோசனைகளுக்கும் மாநாட்டின் இறுதியில் நான் விளக்கங்களை அளிக்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.

இம்மாநாட்டில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story