கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு வழக்கு : பாதிரியார் இன்று விடுவிப்பு
கேரளாவில், பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக, கடந்த 2018-ம் ஆண்டு கன்னியாஸ்திரி கூறிய குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, தன்னை பிஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி, கற்பழித்து விட்டதாக கடந்த 2018-ம் ஆண்டில் புகார் கூறினார்.
போராட்டம் :
பிராங்கோவை கைது செய்யக்கோரி, அந்த மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால், பாதிரியார் பிராங்கோ அதே ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதன்பின், பிராங்கோ முல்லக்கல் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீதான வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விடுவிப்பு :
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய, அரசுத் தரப்பு தவறியதாக கூறி, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் பாதிரியார் பிராங்கோ முல்லக்கலை விடுவித்து உத்தரவிட்டது.