ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை : தமிழகத்தில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி உத்தரவின்பேரில், மருத்துவர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டுக்கு மத்திய சுகாதார துறையை சேர்ந்த வல்லுனர்கள், டாக்டர்கள் வினிதா, புர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகிய 4 பேர் டெல்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.
ஆய்வு :
இந்த குழுவினர், இன்று காலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தனர்.
ஆஸ்பத்திரிகளில் உள்ள வசதிகள், ஆக்கிஜன் சிலிண்டர் உற்பத்தியையம் லேப் வசதிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
அதன்பிறகு, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்துக்கு சென்று அங்குள்ள கட்டுப்பாட்டு அறை, மருந்து சேமிப்பு கிடங்கு ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அறிக்கை சமர்ப்பிப்பு :
தமிழகத்தில் 3 நாட்கள் வரை தங்கி இருந்து, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, ஒமைக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய உள்ளனர்.
ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வெண்டிலேட்டர் வசதிகள், மருத்துவ ஆக்கிஜன் ஆகியவற்றின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து ஆய்வு செய்து, மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உள்ளனர்.