5 நிமிஷத்துக்கு ஒரு பஸ்.. கிளாம்பாக்கத்திலிருந்து சென்னைக்கு இத்தனை பேருந்துகளா? சிஎம்டிஏ விளக்கம்..

By 
cmda

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து இணைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், இது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் விரிவான விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறது. 

"சென்னை மாநகரிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நேரடியாக மக்கள் செல்ல கைவசமிருப்பது பேருந்து வசதி மட்டுமே. மின்சார ரயில் நிலைய இணைப்போ, மெட்ரோ ரயில் நிறுத்தமோ இன்னும் ஏற்படுத்தப்படவில்லை, ரயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரூபாயை, சமீபத்தில் தான் ஒதுக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு" என்று தனியார் இதழ் ஒன்றில் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது.  இதற்கு சிஎம்டிஏ வெளியிட்டு உள்ள பதிலில், 

"கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின்னர் சென்னை மாநகர பகுதிகளையும் புதிய கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் (MTC) மூலம் 498 வழக்கமான பேருந்துகளும் மற்றும் நெரிசல் மிகுந்த நேரங்களில் 200 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 698 MTC பேருந்துகள் மூலம் 4,651 நடைகள் இருவழி புறப்பாடுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய கட்டிடத்திற்கும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து முனையத்திற்கும் இடையே 4 மினி பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வண்டலூர் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT) இடையே 2 மினி பேருந்துகள் கட்டண இணைப்பு சேவை பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT) கோயம்பேடு பேருந்து முனையத்திற்கும் (CMBT) 5 நிமிடத்திற்கு ஒருமுறை சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் (MTC) இயக்கப்பட்டு வருகின்றன. 

இதை தவிர கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT) மற்றும் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கும் 2 நிமிடத்திற்கு ஒருமுறையும், 6 பேருந்துகள் பாயிண்ட்- டூ -பாயிண்ட் பேருந்துகளாகவும், அதே போல கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT) மற்றும் கிண்டி பேருந்து நிலையத்திற்கும் இடையே 3 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், இம்முனையத்திலிருந்து சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், தி.நகர், மாதவரம், அம்பத்தூர், திரு.வி.க. நகர். ரெட்ஹில்ஸ். ஆவடி, மற்றும் பூந்தமல்லி போன்ற முக்கிய நகரத்திற்கும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் (MTC) பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கருத்தில் கொண்டு பொது மக்கள் மற்றும் பயணிகளுக்கு பேருயுதவியாக இருக்கும் வகையில் இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டு ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு, பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மேலும் சென்னை மாநகரத்தில் இருந்து விரைவான போக்குவரத்தினை உறுதி செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் (CMRL) மூன்றாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் கிளாம்பாக்கத்தில் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
 

Share this story