காங்கிரஸ் ஆட்சியில் தலித் வன்கொடுமைகள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

By 
tata

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்கு வருகிற 25ஆம் தேதியும் தெலங்கானா மாநிலத்துக்கு வருகிற 30ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்மாநில காங்கிரஸ் ஆட்சியில் தலித்  வன்கொடுமைகள் தலை விரித்தாடுவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியை தலித்களுக்கு எதிரான கட்சி என்று அவர் கடுமையாகத் தாக்கினார்.

பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான ரிசர்வ் தொகுதிகள் கணிசமாக உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, முதல் தலித் தேர்தல் ஆணையர் மற்றும் முதல் தலித் ஜனாதிபதியின் நியமனங்களை பாஜக செய்ததாக மேற்கோள் காட்டினார். பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான பாஜகவின் ஆதரவையும் பிரதமர் மோடி அப்போது சுட்டிக்காட்டினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அரசாங்கத்தை குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் வழக்குப்பதிவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது.” என்றார்.

நாட்டின் முதல் தலித் தலைமை தகவல் ஆணையர் ஹிராலால் சமாரியா நியமனத்திற்கு எதிர்ப்பு, ராம்நாத் கோவிந்தின் ஜனாதிபதி பதவிக்கு எதிரான எதிர்ப்பு போன்ற நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டினார். தலித் நியமனங்களுக்கு காங்கிரஸின் தொடர்ச்சியான எதிர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸின் தலித் விரோத நிலைப்பாட்டை விமர்சித்தார். மேலும், முந்தைய தேர்தலில் பாஜக எதிர்கொண்ட சவால்களை உணர்ந்து, வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

கிழக்கு ராஜஸ்தானில் உள்ள 13 நகரங்களுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கியமான ERCP திட்டத்தை விரைந்து முடிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் நிலவி வந்தாலும், இந்த முக்கியமான கால்வாய் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை பாஜக நிவர்த்தி செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.

பெட்ரோலுக்கும் டீசலுக்கும் அசோக் கெலாட் அரசாங்கம் விதித்துள்ள உயர் வாட் வரியை பிரதமர் மோடி விமர்சித்தார். இதன் விளைவாக மற்ற பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ராஜஸ்தானின் லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எரிபொருள் விலையை மறுபரிசீலனை செய்வதாக உறுதியளித்த பிரதமர் மோடி, “மற்ற மாநிலங்களை விட இங்கு பெட்ரோல் விலை அதிகம். ஏனென்றால் காங்கிரஸ் அரசாங்கம் கொள்ளையடிக்கிறது.” என்றார்.

“காங்கிரஸ் ஆட்சியின் ஐந்தாண்டுகள் ஒருவரையொருவர் ஓடச் செய்வதிலேயே கழிந்தது. எஞ்சியிருப்பவர்கள் பெண்கள் மற்றும் பிற பிரச்சினைகளில் தவறான அறிக்கைகளை வெளியிட்டு ஹிட் விக்கெட்டுகளாகின்றனர். மீதமுள்ளவர்கள் பணம் மற்றும் லஞ்சம் வாங்கிக்கொண்டு மேட்ச் பிக்சிங் செய்கிறார்கள்.” என்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ப, கிரிக்கெட்டை மையப்படுத்தி காங்கிரஸ் அரசை பிரதமர் மோடி விமர்சித்தார்.

நாகூரில் நடந்த பிரசார பேரணியில் பேசிய பிரதமர் மோடி, உயிரிழந்த தமது தந்தையை அவமரியாதை செய்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது குற்றம் சாட்டினார். அசோக் கெலாட் - சச்சின் பைலட் போட்டி ராஜஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் காணாமல் போவதை உறுதி செய்யும் வகையில், ஒரு மாய வித்தையை நடத்த மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

Share this story