நமோ ஆப் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் உரையாடும் பிரதமர் மோடி..

By 
namo

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நமோ ஆப் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக இன்று மாலை பிரதமர் மோடி உரையாடவுள்ளார். இந்த சந்திப்பின்போது, மக்களவைத் தேர்தலில் பாஜக நிர்வாகிகள் எப்படி பணியாற்ற வேண்டும்? மக்களை எப்படி சந்திப்பது என்பன உள்ளிட்ட தேர்தலுக்கான ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்குவார் என தெரிகிறது.

முன்னதாக, முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தமிழநாட்டுக்கு மட்டும் நடப்பாண்டில் இதுவரை மட்டும் 5 முறை பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். அதேசமயம், பிரதமர் மோடி பூடான் நாட்டுக்கு சென்று திரும்பியதில் இருந்து கடந்த ஐந்து நாட்களாக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மாறாக சமூக வலைதளம் மூலம் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story