தமிழ் விவசாயியை குறிப்பிட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி; ஏன், எதற்காக?

By 
pm feel

தமிழ்நாட்டிற்கு வந்தபோது தன்னைச் சந்தித்த விவசாயி ஒருவர் தன்னிடம் 11 ரூபாயை காஷ்மீர் யாத்திரைக்கான நன்கொடையாகக் கொடுத்தார் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். ஒளிபரப்பு செய்யப்பட்ட அந்த நேர்காணலில் தமிழ்நாட்டுடன் தனக்கு இருக்கும் உறவு பற்றி பிரதமர் மோடி மனம் திறந்து பேசினார்.

தமிழ்நாட்டில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுமாறு கேட்டதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, விவசாயி ஒருவரைச் சந்தித்து பற்றி நினைவுகூர்ந்து கண்கலங்கியபடி பேசினார்.

பிரதமர் மோடி கூறியதாவது:

"தமிழகத்தில் ஏதோ யாத்திரையில் பயணித்துக்கொண்டிருந்தபோது வயலில் இருந்து ஒரு விவசாயி கத்திக்கொண்டே ஒடிவந்தார். அவர் கோமணம் மட்டுமே உடுத்திக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். "நில்லுங்க நில்லுங்க" என்று கூறியபடி ஓடி வந்தார். அவர் பேசியது எனக்குப் புரியவில்லை. நான் அருகில் இருந்த தமிழ் தெரிந்த தொண்டர் ஒருவரிடம் அவர் என்ன சொல்கிறார் என்று விசாரித்தேன்.

"இது என்ன" என்று கேட்டேன். அந்த விவசாயிக்கு நாங்கள் மேற்கொள்ளும் யாத்திரை எங்கு, எதற்கு என்று தெரியவில்லை.  "நீங்க காஷ்மீர் போறதுக்கு  என்னோட பங்களிப்பா வெச்சுக்கோங்க" என்றார். பிறகு "நீங்க காஷ்மீர் தான போறீங்க" என்று கேட்டார். அவருக்கு நாங்கள் காஷ்மீர் செல்கிறோம் என்று மட்டும் புரிந்தது.

அதற்கு அவர் 11 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போது அவருக்கு எந்த மாதிரி ஒரு உணர்வு இருந்திருக்க வேண்டும். அந்த ஏழை விவசாயி வெறும் கோவணம் தான் கட்டியிருந்தார். இதைப் போன்ற நிறைய உணர்வுபூர்வமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன." இவ்வாறு பிரதமர் தனது தமிழ்நாட்டுப் பயணத்தின் மறக்கமுடியாத நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

Share this story