பிரதமர் மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்..

By 
tra4

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 19ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

கேலோ இந்தியா போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ட்ரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பிரதமர் மோடி 19.01.2024 அன்று நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு" தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இந்த விழாவில் தமிழக ஆளுநர், முதலமைச்சர், தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை மாற்று வழித்தடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைப்படுத்தப்படும்

* அண்ணா Arch முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

* பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா Arch-ல் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.

* வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.

* ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட் (டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்.

எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் 19ஆம் தேதி (நாளை) மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில்கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பிறகு, இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகை சென்று ஓய்வெடுக்கிறார்.

ஜனவரி 20ஆம் தேதி காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். பிற்பகல் 2.05 மணிக்கு ராமேஸ்வரம்  ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்கிறார்.

ஜனவரி 21ஆம் தேதி காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கவுள்ளார். அங்கிருந்து காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு பிரதமர் செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் காலை 10.25 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Share this story