பாலியல் பலாத்கார வழக்கு : ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

By 
asaram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு மீது, சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை, தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார். 2013ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

மேலும், சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இந்நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஆசாராம் பாபுவுக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெற்றது.

வாதத்தின் முடிவில், ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஆசாராம் பாபு, ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story