பாஜகவுக்கு ரூ.11,562 கோடி நன்கொடை: தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு..
![12000](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/ae40e28dfee44e5936b6b66989f32da4.jpg)
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை மார்ச் 15 க்குள் தேர்தல் ஆணையம், அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் SBI வங்கிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
இந்த நிலையில், 5 ஆண்டுகளில் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
அதில், நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், அதில், 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடி மதிப்பிலான 13,109 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் SBI தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
2019 ஏப்ரல் 12 ஆம் தேதியில் இருந்து இந்தாண்டு ஜனவரி 24 ஆம் தேதி வரை விற்பனையான தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.11,562 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.