காஷ்மீரில் தேடுதல் வேட்டை : 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் சமீப காலமாக, பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடுல்வேட்டை நடத்தி சுட்டுக் கொன்று வருகிறார்கள்.
அதிர்வு :
கடந்த 11-ந் தேதி பூஞ்ச் மாவட்டம் சூரங்கோட்டில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ அதிகாரி ஒருவரும், 4 ராணுவ வீரர்களும் பலியானார்கள்.
மென்டார் அருகே நார் காஸ்ட் வனப்பகுதியில், 14-ந் தேதி நடந்த சண்டையில் மேலும் 4 ராணுவ வீரர்களும், ஒரு அதிகாரியும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 16-ந் தேதி வெளிமாநிலங்களை சேர்ந்த கூலி தொழிலாளிகள் இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீதான என்கவுன்டர் வேட்டையை தீவிரப்படுத்தினர். பூஞ்ச் மற்றும் ரஜவுரி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
இதையொட்டி, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
என்கவுன்டர் வேட்டை நடப்பதால், யாரும் வெளியில் வர வேண்டாம். பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சுட்டுக்கொலை :
பூஞ்ச் மாவட்டத்தின் மென்டார் வனப்பகுதி மற்றும் ரஜவுரி மாவட்டத்தின் தன்னமண்டி வனப்பகுதியில் நேற்று 9-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள தராகத் பகுதியில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
*