சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. ரயில் மோதியதில் 4 பேர் உடல் சிதறி பலி.. நடந்தது என்ன?

By 
acci9

சென்னை குரோம்பேட்டை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சேகர் (40), சுப்பிரமணி(50), மற்றும் துரை (50) ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலைகள் செய்து வந்தனர். நேற்று வேலை முடிந்ததை அடுத்து 3 பேரும் இரவு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் செல்வதற்காக டிக்கெட் வாங்கியுள்ளனர். 

அப்போது தொழிலாளர்கள் சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகிய 2 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேகர் மற்றும் சுப்பிரமணி மீது மோதியது. இதில் இருவரும்  உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதேபோல் குரோம்பேட்டை நேரு நகர் பகுதி சேர்ந்தவர் பிரணவ் (23 ). இவர் ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து பிரணவ் ரயிலில் குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்து இறங்கினார். அங்கிருந்து வெளியே செல்லுவதற்காக தண்டவாளத்தை கடந்துள்ளார். அந்நேரத்தில் தாம்பரத்தில் இருந்து வந்த மின்சார ரயில் மோதியதில் உடல் சிதறி பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுபோன்ற சம்பவம் நுங்கம்பாத்திலும் நடத்துள்ளது.  நுங்கம்பாத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (39) நேற்று இரவு பணி முடிந்து ரயிலில் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் வெளியே செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நான்கு பேர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பயணிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story