நேரில் ஆஜராக சம்மன்.! விசாரணையை எதிர்கொள்ள தயார்.. 100% வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன்: இயக்குனர் அமீர்
![ameer](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/a4a20c4036b9f21254cecbf7474a2105.jpg)
சர்வசேத அளவில் 2000 கோடி ரூபாய் அளவிற்கு போதைப் பொருட்களை கடத்தியதாக கூறி டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, தலைமறைவான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரையும் கைது செய்யப்பட்டார். மேலும் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்தநிலையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு திரைப்படம் தயாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை தயாரித்துள்ளார் ஜாபர் சாதிக், மேலும் ஜாபர் சாதிக்கும், இயக்குனர் அமீரும் காபி ஷாப் ஒன்றும் இணைந்து தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜாபர் சாதிக் உடன் இயக்குனர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் அமீர் ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மன் தொடர்பாக இயக்குனர் அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயார் என கூறியுள்ளார்.
மேலும் "கொஞ்சமும் தயக்கமில்லாமல், என் தரப்பிலிருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்து சொல்வேன்" எனவும் தெரிவித்துள்ளார். 100 சதவிகிதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன் என அமீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.