தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

By 
tamilpm

தமிழ்ப்புத்தாண்டு நாளை பிறக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் டெல்லியில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் இன்று மாலை தமிழ்ப்புத்தாண்டை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதற்காக அவரது வீட்டு வளாகத்தில் உள்ள புல்வெளியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து 5 கலைக்குழுக்களை சேர்ந்தவர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. இந்த தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொள்கிறார். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு தென் மாநிலங்களை சேர்ந்த பல எம்.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள் என அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரி எல்.முருகன் தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

மேலும் மத்திய மந்திரிகள் உள்பட 500 பிரபலங்களுக்கும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் பங்கேற்கிறார்கள். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்பட தமிழக பா.ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 50 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதையொட்டி அவர்கள் 50 பேருமே டெல்லி சென்றுள்ளனர். வழக்கமாக டெல்லியில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை மட்டுமே கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் மத்திய மந்திரி எல்.முருகன் ஏற்பாட்டின் பேரில் முதல் முறையாக தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

Share this story