பயங்கரவாதிகளால், அமெரிக்க தூதரகம் மீது, ஏவுகணை தாக்குதல்..
ஐஎஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையாக, ஈராக்கில் அமெரிக்கா தனது படைத்தளத்தை அமைத்திருந்தது.
தற்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஈராக்கில் இருந்து பெரும்பாலான எண்ணிக்கையில் அமெரிக்கப் படையினர் திரும்பப் பெறப்பட்டனர்.
2,500 பேர் மட்டும் :
ஈராக்கில் தற்போது 2 ஆயிரத்து 500 அமெரிக்க படையினர் மட்டுமே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை தளத்தை குறிவைத்து, ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஈரான் புரட்சிப்படை தளபதி காசின் சுலைமானி, அமெரிக்கா நடத்திய வான்வெளித் தாக்குதலில் கடந்த 2020-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து, தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
4 ஏவுகணைகள் :
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. 4 ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தை தாக்கியுள்ளன.
பாக்தாத்தில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த பசுமைப் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில், 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத போதும், ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
*