நிபா வைரஸ் தொற்று கண்டறிய, சென்னையில் பரிசோதனை வசதி..
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கேரள- தமிழக எல்லைகளில், சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது :
நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்களுக்கு செய்யப்பட வேண்டிய பரிசோதனை, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட துணை இயக்குனர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவின் எல்லைப் பகுதியில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களோடு கேரளாவை இணைக்கும் அனைத்துச் சாலைகளிலும், 24 மணிநேரமும் செயல்படும் சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வருகிறவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது.
அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் ரத்தம், சிறுநீர், சளி மாதிரிகள், முதுகு தண்டுவட நீர் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் முதல்கட்ட ஆய்வு செய்யப்படும்.
முன்பு, இந்த முதல்கட்ட ஆய்வு புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்படும்.
ஆனால், தற்போது பொது சுகாதாரத்துறையின் மாநில ஆய்வகம் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதால், இங்கேயே இந்த பரிசோதனையை செய்யும் வசதி உள்ளது.
சென்னையில் உள்ள இந்த ஆய்வகத்தில், முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் நிபா வைரஸ் இருப்பது உறுதியானால் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்' என்றார்.