ஆளுநரும், முதல்வரும் சண்டை போடக்கூடாது; பாசமாக இருக்க வேண்டும்: தமிழிசை அறிவுரை

By 
tamilisai10

புதுச்சேரி ராஜ் நிவாஸில் நாகாலாந்து மாநில உதய நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை நிலை ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி அடுத்த பாகூர் கிராமத்திற்கு ஆய்வுக்காக சென்றிருந்தேன். அந்த கிராமத்தில் சமுதாய நலக்கூடம், அங்கன்வாடிகள் பராமரிப்பின்றி இருந்தது. இதனை உடனடியாக சரி செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நட்பு பலமாக இருந்தால் மக்களுக்கும் பல திட்டங்கள் கிடைக்கும். அமர்ந்து பேசுங்கள் என்று கூறினால், இது என்ன குடும்பமா அமர்ந்து பேச என்று என்னை கடிந்து கொள்கிறார்கள். சண்டை போட்டுக்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை விட அமர்ந்து பேசினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆளுநரும், முதல்வரும் பாலமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போகிறீர்களா என்ற கேள்விக்கு பின்னால் தெரிவிக்கப்படும் என்று கூறிய தமிழிசை அது சஸ்பென்ஸ் என்றார்.
 
தொடர்ந்து பேசுகையில், நேற்று நடைபெற்ற அரசு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் நான் ஏதோ விழா ஏற்பாடு செய்தது போன்று என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். விழா ஏற்பாடு செய்தது மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் அழைக்கவில்லை என்றால் அவர் ஆட்சியரை தான் கேள்வி கேட்டிருக்க வேண்டும். என்னிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

 

Share this story