'தி கேரளா ஸ்டோரி' படம் ரிலீஸ் : சென்னையில், 4 இடங்களில் போராட்டம்..

By 
tks4

கேரள மாநில பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி, பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சி படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது.

சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் இன்று திரை யிடப்பட்டது. சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகி இருக்கிறது.

இந்த படம் இந்தி மொழியில் மட்டுமே வெளியாகி உள்ளது. தமிழில் வெளியாகவில்லை. தமிழகத்தில் சேலம் , கோவை, வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் தாம்பரத்திலும் படம் வெளியாகி இருக்கிறது. கோவையில் 3 தியேட்டர்களிலும், சேலத்தில் ஒரு தியேட்டரிலும் வேலூரில் 2 தியேட்டர்களிலும் தாம்பரத்தில் ஒரு தியேட்டரிலும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இதையடுத்து, தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 இடங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

அண்ணாநகர் வி.ஆர். மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ அமைந்துள்ள ராயப்பேட்டை மணிக்கூண்டு , விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். சினிமா ஆகிய சந்திப்புகளில் இன்று மாலையில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் கூறும்போது, மத வெறியை தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து இருக்கிறது. இது திரைப்படங்களுக்கும் பொருந்தும். எனவே வரும் காலங்களில் இது போன்ற படங்களுக்கு மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கிறார். சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


 

Share this story