வீட்டில் திருடி விட்டு, திருடன் செய்த நாற வேலையால் பரபரப்பு..

By 
gygyyyy

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சாலை அருகே உலியம்பாளையம் அடுத்த குப்புசாமி வீதியில் குடியிருப்பவர் ஞானசுந்தரம் என்ற குமார் (வயது 44). இவர் கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இவரது மனைவி, மகன் ஆகியோர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். மதியம் குடும்பத்தினரை அழைத்து வர, குமார் தன் வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார். 

தன் மனைவி குழந்தைகளுடன் தன் வீட்டை வந்து திறந்து பார்த்த போது, படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த ஆடைகள் களைந்த நிலையில் இருந்தன. மேலும், பீரோவில்  வைத்து இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போய் இருந்தன. மேலும், வீட்டின் பின் பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு  அதிர்ச்சி அடைந்த குமார் சம்பவம் குறித்து உடனடியாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், 22 சவரன் நகை, பணம் 3 லட்சம் வரை கொள்ளை போனதாக‌  தெரியவந்தது. வீட்டில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர் வீட்டின் நடுவே இயற்கை உபாதைகளை கழிந்துவிட்டு சென்று உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசு பொருளாகி உள்ளது.

Share this story