இது, அதிகார மமதை.. சர்வாதிகாரப் போக்கு.. வாபஸ் வாங்குங்கள்: ஸ்டாலினுக்கு, இபிஎஸ் வலியுறுத்தல்
![epsmks4](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/a9ac8ebefd67b5072ef55eab6ad17af1.jpg)
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர். நடராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;-
ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட இந்த விடியா அரசின் ஷூட்டிங் முதலமைச்சர் ஸ்டாலின் ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. ஆட்சியாளர்களின் அதிகார மமதை, அடாவடித்தனங்களை தோலுரித்துக்காட்டும் நமது அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒருசில தொலைகாட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதும், கடந்த 30 மாத தி.மு.க. ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் மந்திரிகள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணய குழு முன்னாள் தலைவரும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு) அவர்கள் மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, இந்த விடியா திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது.
காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.