டி.என்.பி.எஸ்.சி. 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு; முழு விவரம்..
![tnpsc2024](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/8f2615c63dd9fec3e18a6349a0e844ed.jpg)
2024ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி, எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலி இடங்கள் இருக்கின்றன? எந்த துறைகளுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? உத்தேசமாக எப்போது தேர்வு நடைபெறும் என்பதை குறித்த முழு விவரங்களும் உள்ளன.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. குரூப் 1 முதல் குரூப் 8 வரையான பிரிவுகளிலும் இதர பணிகளுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசு நிறுவனங்களிலும் டி.என்.பி.எஸ்.சி ஆள்சேர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 19 வகையான தேர்வுகள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம், குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2024 ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் தேர்வு ஜூன் மாதம் நடந்தப்படும் என்றும் தெரிகிறது. குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குரூப் 2, 2ஏ தேர்வு 1294 பணியிடங்களுக்கு நடத்தப்படும். குரூப் 1 தேர்வு அறிவிப்பும் மார்ச் மாதம் வெளியாகும். ஜூலையில் தேர்வு நடைபெறும். இத்தேர்வு மூலம் 65 குரூப் 1 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 1264 வனக்காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.
இவை தவிர சட்டம், தொல்லியல், உடற்கல்வி, நூலகம், கணக்கியல் மற்றும் சிவில் நீதிபதி தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.