தமிழகத்தில் 7 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு, இன்றுமுதல் தடுப்பூசி
சென்னையில் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்ததின் பேரில், தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மொத்தம் 7 லட்சத்து 38 ஆயிரத்து 583 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு சென்றால், முன்னுரிமை அடிப்படையில், அவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் தொடர வேண்டும் என்றால், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
இறைச்சி, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கவனமாக இருக்க வேண்டும்.
கொரோனா இறப்பு எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டவில்லை. கொரோனா இறப்பு தொடர்பாக, திருத்தம் மேற்கொள்ள முறையான ஆவணங்களுடன் அரசு மருத்துவமனையை அணுகலாம்' என்றார்.